ஏர் இந்தியா ஊழியர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்பு
டெல்லி: இரு தினங்களுக்கு முன் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 58 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் ஜூன் 12ம் தேதி முதல் மீண்டும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக ஏர் இந்தியா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பணி உயர்வு, ஊதிய உயர்வு, மங்களூர் விமான விபத்து குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்குவது ஆகியவற்றை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பல சர்வதேச, உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அவதிப்பட்டனர்.
டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 58 ஊழியர்களை ஏர் இந்தியா நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டாலும் விமானப் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. நாடு முழுவதிலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஏர் இந்தியாவின் ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் யூனியன் (ஏசிஇயு), அகில இந்திய விமான பொறியாளர்கள் சங்கம் (ஏஐஏஇஏ) ஆகியவை மீண்டும் ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்துள்ளன.
ஏர் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் மொத்தம் 14 தொழிற்சங்கங்களில் உள்ளனர். இதில் இந்த 2 சங்கங்கள் மட்டுமே ஸ்டிரைக் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதுகுறித்து ஏசிஇயு பொதுச் செயலார் காதியன் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஏசிஇயு தொழிற்சங்கம் மற்றும் அகில இந்திய விமான பொறியாளர்கள் சங்கம் (ஏஐஏஇஏ) ஆகியவற்றை அங்கீகாரம் இல்லாத தொழிற்சங்கங்களா ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மேலும் தொழிற்சங்க அலுவலகங்களையும் ஏர் இந்தியா நிர்வாகம் பூட்டி 'சீல்' வைத்துள்ளது.
ஏர் இந்தியாவிலுள்ள மொத்த ஊழியர்களில் 60 சதவீதம் பேர் இந்த 2 நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந் நிலையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதாக மொத்தம் 58 ஊழியர்களை ஏர் இந்தியா நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் 24 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொழிற்சங்கத் தலைவர்களும் அடங்குவர்.
ஏர் இந்தியா நிர்வாகத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அரவிந்த் ஜாதவ், சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார்.
இதையெல்லாம் கண்டித்து ஜூலை 12ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இதையடுத்து இந்த இரு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜூன் 1ம் தேதி மும்பையிலுள்ள ஏர் இந்தியா தலைமையகத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது.