ஜெட் ஏர்வேஸ்-இண்டிகோ விமானங்கள் மோதல் தவிர்ப்பு!
மும்பை: மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர்.
மங்களூரில் கடந்த 22ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்குகையில் வெடித்து சிதறி 158 பேர் உயிரிழந்தனர். இந் நிலையில் மும்பையில் இந்த விபத்து நடக்க இருந்தது.
நேற்று முன்தினம் இரவு 9.04 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாரானது.
ரன்-வேவுக்குள் நுழையும் முன்புள்ள டாக்சி-வேக்குள் அந்த விமானம் செல்ல தரைக் கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டது. ஆனால், இந்த விமானத்தின் விமானிகள் அதை ரன்வேக்குள் கொண்டு சென்றனர்.
அப்போது கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் அதே ரன்வேயில் தரை இறங்கத் தயாரானது.
இந்தத் தவறைப் பார்த்துவிட்ட தரைக்காட்டுப்பாட்டு மையம், ஜெட் ஏர்வேஸ் விமானத்தை தரையிறங்க அனுமதிக்காமல் வானில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து தரையிறங்க இருந்த அந்த விமானம் அதைத் தவி்ர்த்துவிட்டது. இதன்மூலம் அந்த விமானமும் இண்டிகோ விமானமும் ரனேவேயில் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.