லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., கைத்தறித்துறை அதிகாரி அதிரடி கைது
திருச்சி: வாகனத்திற்கான பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.2000 லஞ்சம் வாங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், கூட்டுறவு சங்கத்தைப் பதிவு செய்வதற்காக ரூ. 3.5 லட்சம் லஞ்சம் பேசி அட்வான்ஸ் தொகையாக ரூ.20,000 பெற்ற கைத்தறித்துறை உதவி இயக்குநரும் லஞ்ச ஒழிப்புப் போஸீலாரால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாம்பழச் சாலை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த போலீஸார், வாகனப் பதிவுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த நபரிடம் ரசாயணம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பினர்.
அவர் கொடுத்த ரூ. 2000 பணத்தை வாங்கிய ஆர்.டி.ஓவை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
ஈரோட்டில் லஞ்ச அட்வான்ஸ் வாங்கிய அதிகாரி கைது
இதேபோல ஈரோட்டில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் விஜயக்குமார் என்பவர் ரூ. 20,000 லஞ்சம் வாங்கியபோது அவரை போலீஸார் கைது செய்தனர்.
இவர் கூட்டுறவு சங்கத்திற்கு அனுமதி வழங்குவதற்கு ரூ. 3.5 லட்சம் பேரம் பேசியுள்ளார். அட்வான்ஸ் தொகையாக ரூ. 20,000 தருமாறும் கோரியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்களது யோசனைப்படி லஞ்ச அட்வான்ஸ் தொகையை தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த விஜயக்குமாரிடம் கொடுத்தபோது போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.
அவரது அறையை சோதனையிட்டபோது அங்கிருந்த கணக்கில் வராத ரூ. 81 ஆயிரம் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications