தமிழத்தில் 2,000 போலி டாக்டர்கள்!
சென்னை: தமிழகத்தில் 2000 போலி டாக்டர்கள் நடமாடுவதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.சுகுமார், கெளரவச் செயலாளர் டாக்டர் டி.என்.ரவிசங்கர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் செயல்பட்டு வரும் போலி டாக்டர்களின் முகவரிகள் மற்றும் போலி டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு ஆகியவையும் சேகரிக்கப்பட்டு டி.ஜி.பி. லத்திகா சரண் மற்றும் ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அலோபதி மருந்துகளை எந்த ஒரு மருத்துவப் படிப்பும் படிக்காதவர்களும், மாற்று மருத்துவம் பயின்றவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.
இதனால் தமிழகத்தில் பல இடங்களில் இந்த போலி டாக்டர்களின் எண்ணிக்கை, தகுதி பெற்ற டாக்டர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்து காணப்படுகிறது.
இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956, இந்திய மருத்துவ பட்டம் சட்டம் 1916, மருந்து மற்றும் அழகுசாதன சட்டம் 1940 ஆகிய சட்டங்களின்படி போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த சட்டங்களின் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகள் மிகவும் சொற்பமானதாக உள்ளது. எனவே அனைத்தையும் ஒருங்கிணைத்த போலி டாக்டர்கள் ஒழிப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
சட்டங்களை குறுகிய காலத்தில் செயலாற்றிட வேண்டும். மேலும் காவல் துறையில் போலி மருத்துவர் ஒழிப்புப் பிரிவை அமைக்க வேண்டும்.
சட்டங்கள் முறையாக இயற்றப்படவில்லை என்றால் ஆயிரக்கணக்கான முறையான டாக்டர்கள் இருந்தாலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கினாலும் போலி டாக்டர்களை ஒழிக்க முடியாது என்றனர்.