3 கர்நாடக அமைச்சர்களை பதவி நீக்க ஆளுநர் பரிந்துரை?
பெல்லாரியைச் சேர்ந்த இந்த ரெட்டிகளும், ராமுலுவும் தங்கள் பண பலத்தால் எம்எல்ஏக்களை வளைத்து முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பாவை நீக்க முயன்றனர். ஒருவழியாய் இவர்களுடன் சமாதானமாய் போனதால் எதியூரப்பா தப்பினார்.
இந் நிலையில் இவர்கள் மீது பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர் கொண்டைய்யா கடந்த ஜனவரி 13ம் தேதி ஆளுனர் பரத்வாஜிடம் ஒரு புகார் அளித்தார்.
அதில், இந்த அமைச்சர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து சுரங்கத் தொழில் செய்து ருகின்றனர். எனவே, அவர்களை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த, ஆளுனர் பரத்வாஜ் இந்த மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், மூன்று பேருமே ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராயினர்.
ஆனாலும் ஜூன் 3ம் தேதிக்குள் விசாரணைக்கு அமைச்சர்களே நேரில் ஆஜராக வேண்டுமென ஆளுனர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ஆளுனரை அமைச்சர்களும், டெல்லியில் பாஜக தலைவர்களும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர்களுக்கு ஆளுநர் அளித்த காலக் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. அப்போதும் அமைச்சர்கள் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராயினர். அமைச்சர்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லாததால் அதை நிராகரிக்க வேண்டும் என்று கோரினர். ஆனால், அதை ஆளுநர் ஏற்கவில்லை.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கருத்துக் கேட்பதற்காக இந்தப் புகாரை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய ஆளுனர் முடிவு செய்துள்ளார் கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில், ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரின் சட்டசபை உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் பரத்வாஜ் பரிந்துரை செய்வார் என்று தெரிகிறது.
மூத்த வழக்கறிஞரான பரத்வாஜ், மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.