3 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மறு ஆய்வு
சென்னை: தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள விழுப்புரம், திருவாரூர் மற்றும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தரப்பட்ட மாணவர் சேர்க்கை அனுமதி ஒப்புதலை மறுஆய்வு செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) முடிவு செய்துள்ளது.
இதனால் தமிழகத்தில் எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுப் பிரிவினர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர கட்-ஆப் மதிப்பெண்ணும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்த டாக்டர் கேதன் தேசாய் ஊழல் புகாரில் கைதான பிறகு, டாக்டர் எஸ்.கே.சாரன் தலைமையில் 6 பேர் கொண்ட புதிய மருத்துவ கவுன்சில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு இந்தக் கல்வியாண்டில் (2010-11) புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள், இந்த ஆண்டு மீண்டும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளின் ஒப்புதலை மறு ஆய்வு செய்ய தீர்மானித்துள்ளது.
இதன்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை ஒப்புதலும் மறு ஆய்வுக்கு உள்ளாகிறது.
தருமபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்து மொத்தமுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதனால் பொதுப் பிரிவினரின் கட்-ஆஃப் மதிப்பெண் 197.5ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
வரும் ஜூன் 21ம் தேதி கவுன்சிலி்ங் தொடங்கவுள் நிலையில், திடீரென தருமபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க ஒப்புதல் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டு்ள்ளது. இதனால் அரசு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 1,398 ஆகக் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜெனரல் கேட்டகிரி எனப்படும் பொதுப் பிரிவினருக்கான இடங்களின் எண்ணிக்கை 512லிருந்து 433ஆகக் குறையும். இதன் காரணமாக பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 198 ஆக அதிகரிக்கும் நிலை உள்ளது.
இந்த ஆண்டு 18,230 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேர விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை:
இந் நிலையில் மருத்துவமனைகளில் மருந்துகளை சுகாதாரமற்ற முறையில் பராமரித்தாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தால் 044 - 2859 2828 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications