தமிழக மகளிர் காங்.தலைவி ஆனால் ஜெயந்தி நடராஜன் ஆதரவாளர் சாய்லட்சுமி
சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் அணித் தலைவராக ஜெயந்தி நடராஜனின் ஆதரவாளரான சாய்லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளுக்குப் பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு கோஷ்டியும் தத்தமது பலத்தை நிரூபிக்க எந்த தூரத்திற்கும் போகத் தயங்காதவை.
ஜெயந்தி நடராஜனுக்கும் தமிழக காங்கிரஸில் ஒரு கோஷ்டி உண்டு. இந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகத்தில்தான் தங்களது செல்வாக்கை நிரூபிக்க மோதிக் கொள்வார்கள்.
முன்பு மகளிர் காங்கிரஸ் தலைவராக ஜெயந்தியின் ஆதரவாளரான காயத்ரி தேவி செயல்பட்டார். பின்னர் ஜி.கே.வாசன் ஆதரவாளரான கோவையைச் சேர்ந்த மகேஸ்வரி பதவியைப் பெற்றார்.
பின்னர் 2007ம் ஆண்டு மீண்டும் ஜெயந்தியின் கை ஓங்கியது. அவரது ஆதரவாளரும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான சாய்லட்சுமி தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது சாய்லட்சுமியை தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதலுடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்த்தன் திவேதி பிறப்பித்துள்ளார்.
முன்னதாக தலைவர் பதவியைப் பிடிக்க ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த சாருபாலா தொண்டமான், கோவை மகேஸ்வரி ஆகியோர் கடுமையாக மோதினர். ஆனால் ஜெயந்தி தனது மேலிடத்து செல்வாக்கை பயன்படுத்தி சாய்லட்சுமியை தலைவியாக்கி விட்டார்.












Click it and Unblock the Notifications