மதுரையில் ரூ.2,500 கோடியில் பால்கன் டயர் தொழிற்சாலை
ரூ. 2,500 கோடி மதிப்பிலான இந்த டயர்ஸ் தொழிற்சாலை,
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் முயற்சியால் இங்கு அமையவுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலக்காரன் பட்டியில் இதற்கென இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் அமைய உள்ள இடத்துக்கு அருகே ஒதுக்கப்பட்டுள்ள தொழிற்சாலைக்கான இடத்தை பால்கன் டயர்ஸ் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது மதுரை கலெக்டர் காமராஜ், டி.ஆர்.ஓ. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தாசில்தார் சுப்பு ஆகியோரும் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டயர் நிறுவன அதிகாரிகள், தொழிற்சாலை அமைக்க 480 ஏக்கர் நிலம் தேவை. அம்பலக்காரன்பட்டி, குறிஞ்சிப்பட்டி, கோணாபட்டியில் இதற்காக அரசு ஒதுக்க முன்வந்துள்ள இடங்களை ஆய்வு செய்தோம்.
இதில் அம்பலக்காரன்பட்டி தான் ஏற்ற இடமாக உள்ளது. அருகில் நான்குவழிச் சாலை, தண்ணீர், மின் வசதி உள்ளது. இது பற்றி எங்கள் தலைமை நிர்வாகத்திற்கு தெரிவிப்போம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை டுக்கப்படும்.
இந்த டயர் தொழிற்சாலை அமைக்க ரூ. 2,500 கோடி முதலீடு செய்யப்படும். இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றனர்.
டன்லப் டயர் நிறுவனத்தின் உரிமையாளர்களான ருயா குழுமத்துக்கு சொந்தமானது தான் இந்த பால்கன் டயர்ஸ் நிறுவனமாகும்.
புதிய சென்ட்ரல் மார்க்கெட் இன்று திறப்பு:
இதற்கிடையே மதுரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சென்ட்ரல் மார்க்கெட்டை அமைச்சர் அழகிரி இன்று திறந்து வைக்கிறார்.
மதுரை நகரின் மத்தியப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கும், கடுமையான சுகாதார சீர்கேட்டுக்கும் காரணமாக இருந்தது சென்ட்ரல் மார்க்கெட்.
மீனாட்சி அம்மன் கோயில் அருகே இருந்த இந்த மார்க்கெட்டை இடமாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்தது.
இதையடுத்து மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே இந்த மார்க்கெட்டை மாற்ற அழகிரி முயற்சி எடுத்தார். இதற்கான அடிக்கல் கடந்த ஆண்டு நாட்டப்பட்டது.
ரூ. 13 கோடி செலவில் மதுரை மாநகராட்சியால் 12 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு 524 கடைகள் கட்டப்பட்டுள்ளன. சில்லரை விற்பனைக்காக 1,000 தரை கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மார்க்கெட்டால் மாட்டுத்தாவணி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கே.கே.நகர் ரோட்டில் மார்க்கெட்டின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மார்க்கெட்டை அழகிரி இன்று திறந்து வைக்கிறார்.