சேது திட்டம்: ரயில் மறியல்-வீரமணி உள்பட 200 பேர் கைது
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற கி.வீரமணி உள்ளிட்ட 200 திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இன்று தி.க. அறிவித்த இந்த போராட்டத்து்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும் இன்று காலை தடையை மீறி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தொண்டர்கள் வேப்பேரி ஈ.வி.கி.சம்பத் சாலையில் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை மடக்கி கைது செய்தனர்.
அவர்களில் 50 பெண்களும் அடங்குவர். அனைவரும் போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக கி.வீரமணி பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் தமிழர்களின் நீண்டகால கனவு. பெரியார், அண்ணா, காமராஜர் வலியுறுத்திய திட்டம். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கிய போது தமிழன் கால்வாய் திட்டம் என்று இதை அழைத்தார்.
அதன்பிறகு அந்த இயக்கம் திராவிடர் கழகத்துடன் இணைந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ரூ.2,400 கோடி மதிப்பில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிபுணர் குழுக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு 6வது வழித்தடம் வரை வேலைகள் விரைவாக நடந்தன. வேலை முடிய இன்னும் 12 கி.மீட்டர் தான் உள்ளது. ஆனால் அதற்குள் பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ராமர் பாலம் இடிக்கப்படுவதாக கூறி திட்டத்தை தடுத்துள்ளது.
ராமர் பெயரை சொல்லி இந்தத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறினால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பும் வாழ்வாதாமும் உயரும்.
இந்தத் திட்டத்தை முடக்கக் கூடாது. விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றம் திறக்கும் நேரத்தில் மத்திய அரசு விரைவு மனு தாக்கல் செய்து திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.