லஞ்சம் -போலீஸாரிடம் சிக்காமல் தப்பி ஓடிய வருவாய் ஆய்வாளர் கைது
சிவகாசி: லஞ்சம் வாங்கியபோது சுற்றிச் சூழ்ந்த போலீஸாரை தள்ளி விட்டு தப்பி ஓடிய வருவாய் ஆய்வாளர் திண்டுக்கல் லாட்ஜில் வைத்து சிக்கினார்.
சிவகாசியில் வருவாய் ஆய்வாளராக இருந்து வருபவர் பாலசுப்ரமணி. இவர் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாகவும், மாணவ, மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க இரக்கமே இல்லாமல் பெரும் தொகையை லஞ்சமாக கேட்பதாகவும் சரமாரியாக புகார்கள் வந்தன.
இதையடுத்து டிஎஸ்பி ஷியாமளா தேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தாலுகா அலுவலகம் விரைந்தனர். அப்போது ஒருவரிடமிருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தார் பாலசுப்ரமணி. இதையடுத்து அவரைப் பிடிக்க முயன்றனர் போலீஸார்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் போலீஸாரை தள்ளி விட்டுவிட்டு பின் பக்க வாசல் வழியாக எகிறிக்குடித்து ஓடினார் பாலசுப்ரமணி. பின்னர் அங்கிருந்த தனது பைக்கில்ஏறி தப்பி விட்டார்.
அதிர்ச்சி அடைந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைப் பிடிக்க வலை விரித்தனர். இந்த நிலையில் பாலசுப்ரமணியின் செல்போன் எண்ணுக்குரிய சிக்னலை வைத்து அவர் திண்டுக்கல்லில் ஒரு லாட்ஜில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் லாட்ஜில் ஒளிந்திருந்த பாலசுப்ரமணியை மடக்கிப் பிடித்தனர்.