ஆப்கானிஸ்தான்: திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல்-40 பேர் பலி
காந்தகார்: ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 40 பேர் பலியாயினர்.
தெற்க ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகர் அருகே உள்ள அர்கானாப் மாகாணத்தில் உள்ள நன்ககான் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இங்கு நடந்த ஒரு திருமண விழாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது ஆண்கள் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு தீவிரவாதி தான் அணிந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இதில் 40 பேர் பலியாயினர். மணமகன் உள்பட 73 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 10க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர்.
குண்டு வெடித்த இடம் முழுவதும் உடல்கள் சிதறி கிடக்கின்றன. காயமடைந்த அனைவரும் கந்தகார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
திருமண வீட்டில் தீவிரவாதிகள் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பகுதியில் ஆடம்பர விழாக்கள் நடத்தக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆனால், திருமண விழா ஆடம்பரமாக நடத்தப்பட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
நேடோ ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்-4 பேர் பலி:
இந் நிலையில் தெற்கு ஆப்கானி்ஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்கா தலைமையிலான நேடோ படையினரின் ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இதில் 4 அமெரிக்க வீரர்கள் பலியாயினர். இதன்மூலம் இந்த வாரத்தில் பலியான நேடோ வீரர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.