ரயில் பாதை தகர்ப்பு ஒரு தீவிரவாத செயல் - ப.சிதம்பரம்
ப.சிதம்பரம் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார். அரை மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது.
பின்ன்ர் வெளியே வந்த அவரிடம்,
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என்று மத்திய அரசுக்கு தெரியாதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு சிதம்பரம் பதிலளிக்கையில்,இது பற்றி அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்கு எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார்.
விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளதே? இதில் யாரும் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கதக்கது. இது ஒரு தீவிரவாத, பயங்கரவாத செயலுக்கான முயற்சி என்பதால் இதை வன்மையாகவே கண்டிக்கிறோம்.
சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒரு சிலரை கைது செய்திருப்பதாக கூறி உள்ளனர். தமிழக போலீசும், உளவுத்துறையும் இணைந்து செயல்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களைக் குறி வைத்து நடந்த தாக்குதலா இது என்ற கேள்விக்கு,
என்னை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூற முடியாது. நான் டெல்லியில் இருக்கும்போதே மலைக்கோட்டை ரயிலில் செல்லும் முடிவை கேன்சல் செய்துவிட்டேன். இது என் உயிர் பிரச்சினை மட்டுமல்ல, எல்லா உயிர்களும் ஒன்றுதான். 2 ஆயிரம், 3 ஆயிரம் மக்கள் உயிர் சம்பந்தப்பட்டது என்றார்.
முதல்வருடன் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
ராஜபக்சே இந்தியா வந்தபோது ஏற்பட்ட இந்தியா- இலங்கை அரசின் ஒப்பந்தம் பற்றி ஆலோசித்தோம். இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் ரூ.1000 கோடி மதிப்பில் வங்கிகள் மூலம் கட்டிக்கொடுக்க இந்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
இலங்கை கணக்குப்படி 52 ஆயிரம் பேர் முகாம்களில் இருப்பதாக கூறுகிறார்கள். நம் கணக்குப்படி 57 ஆயிரம் பேர் முகாம்களில் இருப்பதாக அறிகிறோம். அவர்களை சொந்த இடங்களுக்கு விரைவில் குடி அமர்த்த இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி கூறி உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் கட்டுவது, விமான நிலையம் புதிதாக உருவாக்குவது என பல்வேறு அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
6 மாதத்தில் இவைகளை முடிப்பதாக இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது என்றார்.