பன்றிக் காய்ச்சல் பரவல் - கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
சென்னை: கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஸ்வைன் ஃபுளூ என்ற பன்றிகாய்ச்சல் பரவி வருகிறது. இது மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் தடுக்க மத்திய சுகாதாரத்துறை மற்ற மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நாகர்கோவிலில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்றதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் இக்காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தமிழக - கேரள எல்லையோர பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது அரசு.
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இருக்கும் நேரத்தில் பன்றி காய்ச்சல் பற்றிய பீதி ஏற்பட்டுள்ளது. அன்டை மாநிலத்தில் இருந்து பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்கட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் பொற்கை பாண்டியன் கூறுகையில்,
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. நாகர்கோவிலில் மட்டும் ஒரு நபர் பாதிக்கப்பட்டிருந்த போதும் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டார். கேரளாவில் அதிகமாக பரவி வருவதால் தமிழக - கேரள எல்லையில் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது. தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.