குடும்பச் சண்டை- சென்னையில் பெண் போலீஸ்காரர் தீக்குளித்து தற்கொலைc
சென்னை: குடும்பச் சண்டை காரணமாக சென்னையில் பெண் போலீஸ்காரர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசில் முதல் நிலை காவலராக வேலை பார்த்தவர் சங்கீதா. இவரது கணவர் முத்து கிருஷ்ணன் எழும்பூர் போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
இருவருக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ராஜா அண்ணாமலைபுரம் வல்லீஸ்வரர் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் சண்டை நடந்து வந்தது.
நேற்று முன்தினம் காலையும், கணவன் மனைவிக்கு இடையே சண்டை மூண்டது. மனைவியை திட்டி விட்டு முத்துக்கிருஷ்ணன் வெளியே போனார்.
கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனம் உடைந்த சங்கீதா வீ்ட்டில் தீக்குளித்து விட்டார். உடல் கருகிய நிலையில் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குசிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் சங்கீதா.
சங்கீதாவின் வீட்டிலிருந்து ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், எனது கணவர் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் சங்கீதா.
இதுகுறித்து அபிராமபுரம் போலீஸாரும், ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகின்றனர்.