உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே
சென்னை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது.
கோவையில் உலகதமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். மேலும் பல நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்களும், புலவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
மாநாட்டில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0649) 21-ந்தேதி இரவு 10.30 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு கோவை சென்றடையும்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 22-ந் தேதியும் இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் விடப்படவுள்ளது. சிறப்பு ரயில் எண்.0648 27-ந்தேதி அன்று கோயம்புத்தூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரலுக்கு செல்லும். அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் வடக்கு ஆகிய நிலையங்களில் சிறப்பு ரயில்கள் நின்று செல்லும்.
இதேபோன்று கன்னியாகுமரியில் இருந்தும் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. இது கன்னியாகுமரியில் இருந்து 22-ந்தேதி காலை 4.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 5.30 மணிக்கு கோவை செல்லும்.
27-ந்தேதி இரவு 11.55 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, மணியாச்சி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும்.
அனைத்து சிறப்பு ரயில்களுக்கும் நாளை 14ம் தேதி முதல் முன்பதிவு தொடங்குவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.