முதல்முறையாக தமிழில் நடந்த ரயில்வே தேர்வு.. மாணவர்கள் உற்சாகம்!
சென்னை: தெற்கு ரெயில்வேயில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணி இடங்களுக்கான தேர்வுகள் முதல்முறையாக தமிழிலேயே நடந்தன.
இதனால் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வை எழுதினர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மண்டல ரெயில்வே தேர்வு வாரியங்களும் ரெயில்வே பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்தி வந்தன. இந்தி தெரியாத, ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சியை பெற்றிராத மாநில மொழி மாணவ-மாணவிகளுக்கு இது மிகவும் சிரமாக இருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்து இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் ரெயில்வே தேர்வுகளை நடத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவும் அனுமதி கிடைத்தது.
இதன்படி, தமிழ்நாடு உள்ளடக்கிய சென்னை மண்டல ரெயில்வே தேர்வு வாரியத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வுகளை நடத்த ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, முதல்முதலாக உதவி லோகோ-பைலட் (ரெயில் என்ஜின் டிரைவர்) தேர்வு கடந்த வாரம் தமிழ் உள்பட மேற்கண்ட மொழிகளில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் சுமார் 200 உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் சென்னை மட்டுமே தேர்வு மையம் ஆகும். தியாகராயநகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி, குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கர்நாடகா சங் மேல்நிலைப்பள்ளி, வடபழனி எம்.ஜி.ஆர். ஜானகி மேல்நிலைப்பள்ளி உள்பட 80 இடங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
மாணவ-மாணவிகள் தாங்கள் விரும்பிய மொழியில் தேர்வு எழுதிக்கொண்டனர். தமிழக மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் தமிழ் வினாத்தாளை பார்த்து உற்சாகமாக தேர்வு எழுதினர். காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 11/2 மணி நேரம் தேர்வு நடந்தது.
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், "ரயில்வே தேர்வுகளில் வினாக்கள் தமிழிலும் இருப்பதால் கேள்விகளை எளிதில் படித்துப் பார்த்து புரிந்துகொண்டு விடை அளிக்க முடிந்தது'' என்றனர் மகிழ்ச்சியுடன்.