விஸ்வமடுவில் 2 குழந்தைகளின் தாயைக் கெடுத்த சிங்கள ராணுவ வெறியர்கள்
விஸ்வமடு (ஈழம்): முல்லைத்தீவு மாவட்டம் விஸ்வமடு பகுதியில் மறுகுடியேற்றம் செய்யப்பட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்த ஆறு சிங்கள காமுக வீரர்கள், 2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த வெறிச் செயல் நடந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
விஸ்வமடு பகுதியில் உள்ள ரெட்பர்னா என்ற கிராமத்தில் தமிழர்கள் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு வசித்து வருகின்றனர். அங்கு ஒரு வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை அணுகிய ராணுவ வீரர்கள் அவரை கட்டாயப்படுத்தி வெறித்தனமாக கற்பழித்துள்ளனர்.
2 வாரங்களுக்கு முன்புதான் இந்தப் பெண் தனது குழந்தைகளுடன் இங்கு மறு குடியமர்த்தப்பட்டார்.
சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ஆறு ராணுவ வீரர்களையும் கைது செய்து கிளிநொச்சி மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்பு ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் இன்று அடையாள அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண் கிளிநொச்சி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.