தமிழில் பெயர் மாற்றம்: 2 மாத அவகாசம் கோரும் வெள்ளையன்!
சென்னை: அனைத்து கடைகளின் பெயர்களும் தமிழில் மாற்ற வணிகர் சங்கம் ஆதரவு அளிப்பதாகவும், அதற்கு மேலும் 2 மாத கால அவகாசம் வேண்டும் என வணிகர் சங்க பேரவைத் தலைவர் த வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் விடுத்துள்ள அறிக்கை:
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வெற்றியடைய வணிகர்கள் அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்போம் என்பதுதான் எமது 27-வது வணிகர் தின மாநாட்டின் முதல் தீர்மானம்.
கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் எனறு சென்னை மாநகராட்சி அறிவித்தபோது அதை ஆதரித்து உடனடியாக செயலில் இறங்கியது எங்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைதான்.
வணிகர்களும் மனமுவந்து பெயர் மாற்றம் செய்து வருகின்றனர். பெயர் மாற்றம் செய்ய ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும் நடைமுறையில் உள்ள சில சிரமங்களாலும் சில வணிகர்களால் குறித்த காலக்கெடுவிற்குள் பெயர் மாற்றம் செய்ய இயலாத நிலை இருக்கிறது. எனவேதான் இன்னமும் இரண்டு மாதங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்று எமது பேரவை கேட்டுக்கொண்டது.
ஆனால், சென்னை மாநகராட்சி 20 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தது. இது வணிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் சென்னை, திருச்சி, கோவை மாநகராட்சிகளிலும், பெரிய நகரங்களிலும் பெயர் மாற்றம் செய்யாத வணிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்தும், பெயர்ப் பலகைகளை அகற்றியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது வணிகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து பிறமொழி வணிகப் பெயர்களுக்கும் சரியான தூய தமிழ்ப் பெயர் பட்டியல் அரசே வெளியிட வேண்டுகிறோம். போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும். பெயர் மாற்றம் செய்யும் வணிகர்களுக்கு தொழில் உரிமக் கட்டணம் தொழில் வரி ஆகியவற்றில் 50 சதவீதம் சலுகை, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக வணிகர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை கைவிட உத்தரவிட வேண்டும்.
நுகர்ப்பொருட்களின் உறைகளில் அதன் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்கிற எமது பேரவையின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஆணை பிறப்பிக்க வேண்டும். கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இடம் பெற்றால்தான் 'இது தமிழ்நாடு' என்று உலகத் தமிழர்கள் உணர்வார்கள் என்கிற கருத்து வணிகர்களுக்கு சிறப்பை ஏற்படுத்தும்.
இதை உணர்ந்து பெருமிதம் கொண்டு பொருட்செலவை ஒரு பொருட்டாக கருதாமல் தமிழகமெங்கும் உள்ள வணிகர்கள் தங்களை யாரும் வலியுறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல் தாங்களாகவே மனமுவந்து பெயர்ப் பலகைகளில் தமிழில் எழுதி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்க்க வேண்டும் என்று வணிகர்களுக்கு எடுத்துச் சொல்லி தாங்கள் தலைமையில் நடைபெற விருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறக்க வணிகர் சங்க பேரவை உதவியாக இருக்கும்..."
இவ்வாறு வெள்ளையன் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications