ராஜஸ்தான்..ராஜ்யசபா தேர்தல்-4 பாஜக எம்எல்ஏக்கள் 'மிஸ்ஸிங்': 75 எம்.எல்.ஏக்கள் சிறைவைப்பு!
ராஜஸ்தானில் பாஜகவுக்கு 79 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அங்கு அந்தக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு 2 வேட்பாளர்களும் வெல்ல 82 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவை பெற பாஜக, தனது கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏக்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.
எப்படியாவது ஆதரவை பெற்று விடுவோம் என்று பாஜக பொது செயலாளர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார். இதற்காக ராஜஸ்தானிலேயே முற்றுகையிட்டுள்ளார்.
அடுத்த கட்சி எம்எல்ஏக்களின் ஓட்டுக்களை வாங்க பாஜக முயன்று வரும் நிலையில், அவர்களது கட்சியைச் சேர்ந்த 4 பேர் 'காணாமல்' போய்விட்டனர். இவர்கள் ஆளும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்க்களிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் ஜெத்மலானியை வேட்பாளராக நிறுத்தியதற்கு பாஜக எம்எல்ஏக்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதனால் தலைமறைவான 4 பேர் தவிர மிச்சமுள்ள எம்எல்ஏக்களி்ல் பலரும் கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்ற சந்தேகம் பாஜக தலைமையிடம நிலவுகிறது.
மேலும் தொழிலதிபரான சந்தோஷ் குமார் பகோர்டியா, காங்கிரசின் மறைமுக ஆதரவோடு சுயேட்சை வேட்பாளராக களத்தில் குதித்துள்ளார். இவர் பாஜக மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு வலை வீச ஆரம்பித்துள்ளார். ஆளும் காங்கிரஸ் கட்சியும் இவரை ஆதரிப்பதால் பாஜக சிக்கலில் உள்ளது.
இதையடுத்து எம்.எல்.ஏக்களை பாதுகாக்க 75 பேரையும் ஜெய்ப்பூர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பாஜக 'பூட்டி' வைத்துள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏக்களை மற்ற கட்சியினர் தொடர்பு கொள்ள முடியாதவாறு அவர்கள் 'சிறை' வைக்கப்பட்டுள்ளனர்.
வரும் 17ம் தேதி ராஜ்யசபா ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதனால் அதுவரை இந்த எம்.எல்.ஏக்கள் வெளியே போக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜேவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, எங்கள் கட்சியின் பெரும்பலான எம்எல்ஏக்கள் இப்போது தான் முதன்முறையாக ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கப் போகின்றனர். அவர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என்று பயிற்சி தரவே இந்த பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தோம். மற்றபடி யாரையும் அடைத்து வைக்கவில்லை. ஆனால், இவர்களை விலைக்கு வாங்க எதிர் தரப்பு முயல்கிறது என்றார்.
ஆனால், கட்சித் தலைமையின் 'கண்ணில் படாமல் தலைமறைவாக' உள்ள 4 எம்எல்ஏக்களும் மாற்றி ஓட்டு போட்டால் முதல் வேட்பாளரான வி.பி. சிங்கின் வெற்றி மட்டுமே நி்ச்சயமாகும். ராம் ஜேத்மலானி வெல்வது சந்தேகமே.
இதற்கிடையே பாஜக குறி வைத்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏக்களை இழுக்க ஆளும் காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருகிறது.