விழுப்புரம் அருகே பட்டாசு வெடித்ததால் பீதி-வைகை எக்ஸ்பிரஸ் நிறுத்தம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி - பேரணி ரயில் நிலையம் இடையே பலத்த வெடிச் சத்தம் கேட்டதால் அப்போது அந்த வழியாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால் வெடித்தது பட்டாசு எனத் தெரிய வந்ததால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
கடந்த சனிக்கிழமையன்று விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தில் பேரணி ரயில் நிலையம் அருகே குண்டுவைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்போது அந்தப் பாதையை கடக்கவிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தப்பினர்.
இந்த நிலையில் நேற்று முற்பகல் 11.45 மணியளவில் மதுரையிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் விக்கிரவாண்டி- பேரணி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது பலத்த வெடிச்சத்தம் கேட்டது.
இதையடுத்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தினார். ரயிலை விட்டு இறங்கியஅவர், அங்கிருந்த கேங்மேனிடம் வெடிச்சத்தம் கேட்டது குறித்து விசாரித்தார். ஆனால் கேங்மேனுக்கும் சத்தம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் போனது. இந்த சம்பவத்தால் பயணிகளும் பீதியடைந்தனர். விரைந்து வந்த போலீஸார் தீவிரமாக தண்டவாளத்தை ஆராய்ந்தனர். ஆனால் எங்கும் எதுவும் தென்படவில்லை.
பின்னர் போலீஸார் அருகில் உள்ள கிராமத்தில் விசாரணை நடத்தியபோது சிலர் வெடித்த பட்டாசுசப்தத்தால்தான் வெடிச்சத்தம் போல கேட்டது தெரியவந்தது. இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது.