சென்னை வைத்தியநாதன் பாலத்தை சீர்படுத்த வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: வட சென்னையில் கொருக்குப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளை இணைக்கும் வைத்தியநாதன் பாலத்தை சீர்படுத்த வலியுறுத்தி இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர். அதேபோல கூட்டணிக் கட்சிகளான மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினரும் திரளாக பங்கேற்றனர்.
போராட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.
முன்னதாக இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில்,
வட சென்னை மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு உட்பட்ட 10-வது வட்டத்தின் நடைபாதை வாசிகளுக்காக எனது ஆட்சிக் காலத்தில் 1511 மனைகள் உருவாக்கப்பட்டதோடு, இவர்களுக்காக 96 பொது கழிப்பிடங்களும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டித் தரப்பட்டன. ஆனால், மேற்படி குடியிருப்புதாரர்கள் தங்கள் மனைகளுக்கு உள்ளேயே கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொண்டதால் பொதுக் கழிப்பிடம் பயனற்றுப் போனது.
எனவே, இந்த பொதுக் கழிப்பிடத்தை அகற்றிவிட்டு மனைகளாக மாற்ற எனது ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2006-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினையடுத்து, 96 பொதுக் கழிப்பிடங்கள் அமைந்திருந்த குடிசை மாற்று வாரிய இடத்தினை தி.மு.க-வினர் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
அடுத்தபடியாக, கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்ட நிலம் தேவைப்பட்டதால், அங்கு குடியிருந்தவர்களுக்கு வேறு குடியிருப்புகள் ஒதுக்கும் பொருட்டு, பாரதிநகர், பகுதி-2-ல் 108 வீடுகள் எனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன. 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதின் காரணமாக, மேற்படி குடியிருப்புகளை உரியவர்களுக்கு ஒதுக்க இயலவில்லை.
இது போன்ற முறையற்ற செயல் காரணமாக கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர், பாரதிநகர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்டையார்பேட்டை பகுதியையும், கொருக்குப்பேட்டை பகுதியையும் இணைக்கின்ற வைத்தியநாதன் பாலம் எனது ஆட்சிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பாலத்தை தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தப் பாலம் தற்போது பழுதடைந்துள்ளது. மேற்படி பாலம் சீர்செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்களும், பத்திரிகைகளும் சுட்டிக்காட்டிய பிறகும் தி.மு.க. அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மக்கள் நலப் பணிகளில் அக்கறை செலுத்தாமல், ஆக்கிரமிப்பு, முறைகேடு ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கழிப்பிடங்கள் தி.மு.க-வினரால் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாரதிநகர் பகுதி-2-ல் கட்டப்பட்ட 108 குடியிருப்புகளை உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும், தண்டையார் பேட்டை பகுதியையும், கொருக்குப்பேட்டை பகுதியையும் இணைக்கின்ற வைத்தியநாதன் பாலத்தை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க. வடசென்னை மாவட்டம் சார்பில், 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications