ரயில் பாதை தகர்ப்பு தொடர்பாக விசாரிக்கப்பட்டோர் குறித்து அறிக்கை-அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விழுப்புரம் அருகே ரயில் பாதை தகர்ப்பு வழக்கில் பிடித்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டோர் குறித்து நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையம் அருகே ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்ப்பட்ட வழக்கில் 30க்கும் மேற்பட்டோரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் தமிழ் வேங்கை என்பவரும் ஒருவர்.
இந்த நிலையில் தமிழ் வேங்கையின் மனைவி மங்கயர்க்கரசி உள்பட பிடித்துச் செல்லப்பட்ட 9 பேரின் உறவினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு பரிசீலனைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு புதன்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிடித்துச் செல்லப்பட்டோரில் 9 பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பிடித்துச் செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்போர் குறித்து நாளைக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.