மும்பை, தானேவில் தொடர்ந்து கன மழை-சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி
தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
மும்பை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும், தானே, புனே நகர்களிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
மும்பையில் தாழ்வான பகுதிகள் அனைத்தும் மழை நீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மும்பையில் விமானம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பரேல், தாதர், அந்தேரி, ஹிந்த்மாதா ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. புறநகர் ரயில்கள் அனைத்தும் சில நிமிடங்கள் தாமதமாக செல்கின்றன.
கன மழையால் பல விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது திருப்பி விடப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து கிளம்பும் விமானங்களும் தாமதமாக செல்கின்றன.
கொலாபா பகுதியில், 81.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சாந்தாகுருஸ் பகுதியில்,59.8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
எட்டு பேர் சுவர் இடிந்து பலி
இந்த நிலையில் தானே பகுதியில் தியானேஸ்வர் நகர் என்ற இடத்தில் கன மழைக்கு வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.