ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சந்தேக நபர் கைது-நக்சலைட்டா?
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் மர்மான முறையில் நடமாடிய நபரை வனத்துறையினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். அவர் நக்சலைட்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
செண்பகத்தோப்பு வனப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியாகும். இங்கு சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில், 24 மணி நேர காவல் மற்றும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நான்கு பேரைப் பார்த்த வனத்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது திடீரென 3 பேர் வனத்துறையினரை பிடித்துத் தள்ளி விட்டு தப்பி ஓடினர். இதை எதிர்பார்க்காத வனத்துறையினர், மீதமிருந்த நபரை இறுக்கமாக பிடித்துக் கொண்டனர்.
பின்னர் அந்த நபரை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அவர் என்று தெரிய வந்தது.
அவர் நக்சலைட்டாக இருக்கலாம் அல்லது நக்சலைட் ஆதரவாளராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications