தர்மபுரி அருகே வேன்-லாரி மோதலில் திருமணத்துக்கு சென்ற 18 பேர் பலி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திருமண கோஷ்டி சென்ற வேனும், லாரியும் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது.
தர்மபுரி மாவட்டம் பெல்ராம்பட்டியை சேர்ந்த கணேசன்-சுகன்யா ஆகியோர் மகள் நித்திக்கும், பொம்மிடியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் இன்று பில்பருத்தியில் உள்ள மணமகன் இல்லத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இதற்காக நேற்று மணமகள் வீட்டார் மற்றும் உறவினர்கள் 65 பேர் மினி லாரியில் பொம்மிடிக்குச் சென்றனர்.
இரவு 10.30 மணியளவில் பாலக்கோடு அருகே கர்த்தனூர் என்ற இடத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கை கடந்து கர்த்தாரப்பட்டி என்ற இடம் அருகே மினி லாரி சென்றபோது முன்னால் ஒரு டிராக்டர் சென்றது.
அந்த டிராக்டரை ஒரு பஸ்சும், திருமண கோஷ்டியின் லாரியும் ஒரே நேரத்தில் கடந்தன.
டிராக்டரை கடந்து பஸ் இடது பக்கமாக சென்றுவிட்டது. அப்போது சரக்கு ஏற்றிக் கொண்டு எதிரே வந்த லாரி திருமண கோஷ்டி லாரி மீது மோதியது.
இதில் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. திருமண கோஷ்டியினர் 16 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 23 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த ஆம்புலன்சுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர்.
லாரியின் முன்பக்கத்தில் உட்கார்ந்திருந்த மணமகள் நித்தி காயமின்றி தப்பிவிட்டார்.
விபத்தில் தனது உறவினர்கள் 18 பேர் இறந்ததைப் பார்த்து மணமகள் கண்ணீர் விட்டு கதறி அழுது மயங்கினார்.
விபத்தின் காரணமாக நித்தி- அருணுக்கு இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது.
விபத்தில் லாரியின் டிரைவர் குமாரவேல் (35), சரக்கு லாரியின் டிரைவரான கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (48) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அமுதா மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தேவையான சிகிச்சைகள் அளிக்கவும் உத்தரவிட்டார். மேலும் இறந்தவர்களின் உடலை விரைவாக பிரேத பரிசோதனை செய்து தரவும் அறிவுறுத்தினார்.
விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்பு முயற்சிகள் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது.
பாலக்கோடு போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடித்துவிட்டு ஓட்டியதால் விபத்து-ஐஜி சிவணான்டி:
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி. சிவணான்டி கூறுகையில்,
சரக்கு வண்டியில் ஆட்களை ஏற்றிச் செல்வதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும்தான் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. சரக்கு வண்டிகளில் ஆட்களை ஏற்றுவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த வாகன உரிமையாளரை கைது செய்வதுடன், டிரைவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.
சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் செக் போஸ்ட் அதிகரிக்கப்படும். அப்போது அந்த சாலைகளில் செல்லும் சரக்கு வாகனங்களில், ஆட்களை ஏற்றினால் அப்பகுதி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்கள். அப்படி செய்யாவிட்டால், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மினி லாரியை ஓட்டியவர் குடித்துவிட்டு ஓட்டியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications