அதிமுகவில் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை-அழகு திருநாவுக்கரசு

அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் வரிசையில் நேற்று இணைந்துள்ளார் அழகு திருநாவுக்கரசு. இவர் அதிமுக அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர்.
இந்த நிலையில் இவரும் திமுகவுக்கு வரப் போவதாக நேற்று செய்தி பரவியது. அதற்கேற்ப நேற்று இரவு முதல்வர் கருணாநிதியை தனது ஆதரவாளர்களோடு அண்ணா அறிவாலயத்தில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் அழகு திருநாவுக்கரசு.
அவருடன் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் வேதாரண்யம் மாணிக்கம், சீர்காழி மூர்த்தி, மயிலாடுதுறை தங்கமணி மேலும் பல அதிமுக நிர்வாகிகளும், பாஜகவைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினரும், தஞ்சை கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான ஞானசேகரன் உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அழகு திருநாவுக்கரசு பேசுகையில், அதிமுகவில் உண்மையான தொண்டன் முதல் 2ம் கட்டத் தலைவர்கள் வரை யாருக்குமே மரியாதை இல்லை. அனைவருமே அவமானத்தில் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
யாருமே ஜெயலலிதாவை சந்தித்துப் பேச முடியாது. ஆனால் திமுகவில் முதல்வர் கருணாநிதியை யார் வேண்டுமானாலும் சந்தித்துப் பேச முடிகிறது.
அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்களுக்கு மரியாதை இல்லை. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமே மதிக்கப்படுகிறார்கள். தமிழ்ப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அதிமுக சீரழித்து வருகிறது.
துணை முதல்வர் ஸ்டாலினின் அயராத உழைப்பு மக்களை கவர்ந்துள்ளது. இந்த அரசின் திட்டங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது.
எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்கு திமுகவில் உரிய மரியாதை கிடைக்கிறது. திராவிட கொள்கையைப் பின்பற்றும் ஒரே கட்சியும் திமுக தான். முறைப்படி விரைவில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுகவில் இணைவேன் என்றார்.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்த அழகு திருநாவுக்கரசு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications