அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் கொட்டப்பட்ட சிமென்ட் கட்டி-ரயிலைக் கவிழ்க்க சதியா?
சென்னை: அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கொட்டப்பட்ட சிமென்ட் கலவையால் ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரக்கோணத்திலிருந்து இன்று அதிகாலையில் ஒரு ரயில் என்ஜின் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த என்ஜின், பட்டாபிராம் ரயில் நிலையத்தை கடந்தபோது திடீரென எதுவோ குறுக்கிட்டது போல உணர்ந்தார் என்ஜின் டிரைவர்.
இருளாக இருந்ததால் அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து பட்டாபிராம் ரயில் நிலைய மேலாளருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார், மோப்ப நாய் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து சோதனையிட்டனர்.
அப்போது தண்டவாளத்தில் சிமென்ட் கட்டி கிடந்ததைப் பார்த்தனர். அதன் மீதுதான் அந்த என்ஜின் ஏறி இறங்கியுள்ளது. இதை யார் இங்கு கொண்டு வந்து கொட்டியது என்பது தெரியவில்லை. மீதமான சிமென்ட் கலவையை வீடுகள், கட்டடங்கள் கட்டும் இடத்தில் போட்டு வைப்பது போல தண்டவாளத்தில் கொண்டு வந்து கட்டியுள்ளனர்.
இந்த சிமென்ட் கட்டி பெரிதாக இல்லை. மேலும், அது நன்கு இறுகாமலும் இருந்ததால் என்ஜின் தப்பியது. பெரிதாக இருந்து, இறுகி கான்க்ரீட் ஆகியிருந்தால் என்ஜின் கவிழ்ந்திருக்கும்.
எனவே இது சதிச் செயலா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.