தர்மபுரியில் 11 குழந்தைத் திருமணங்கள் அதிரடியாக தடுத்து நிறுத்தம்
பாலக்கோடு, பென்னாகரம், சீரியப்பட்டி, எழுமல் மந்தை உள்ளிட்ட கிராமங்களில் இந்த திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து அமுதாவுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அனைத்துத் திருமணங்களையும் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்.
நேற்று சம்பந்தப்பட்ட சிறுமிகளையும், சிறுமிகளின் பெற்றோர்களையும் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அனைவருமே 16 வயதைக் கூடத் தாண்டாத சிறுமிகள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களின் திருமணங்களை நடத்த பெற்றோர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட 11 சிறுமிகளும் தங்களது படிப்படைத் தொடர மாவட்ட நிர்வாகம் உதவும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
18 வயது நிரம்பாதவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று பெற்றோர்களை எச்சரித்த அதிகாரிகள், இந்த முயற்சிகளை கைவிடுமாறும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பெண் சிசுக் கொலைக்கு மட்டுமல்லாமல் சிறார் திருமணங்களுக்கும் பெயர் போனது தர்மபுரி மாவட்டம். கடந்த 6 மாதங்களில் மட்டும் அரசுக்குத் தெரியாமல் 35 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், பல குழந்தைத் திருமணங்கள் உரிய நேரத்தில் தடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரே சமயத்தில் 11 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.