செருப்பு விளம்பரத்தில் மம்தா: கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு
டெல்லி: கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் பெங்காலி பத்திரிகை ஒன்றில் நேற்று முழு பக்க செருப்பு விளம்பரம் ஒன்று வெளியாகி இருந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அந்த விளம்பரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் செருப்பை அணிந்து நடந்து வருவது போன்று இருந்தது. இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உயரிய பதவியில் இருப்பவர் இப்படி ஆதாயம் தரும் செயலில் ஈடுபட்டது சட்டப்படி குற்றம் என்றும், இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் செருப்பு விளம்பரம் பற்றி அறிந்து கொண்ட மம்தா பானர்ஜி அதிர்ச்சிக்குள்ளானார். இந்த விளம்பரம் தனது அனுமதியின்றி வெளியிடப்பட்டதாக கூறினார். மேலும், அவர் இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் செருப்பு நிறுவனம் ஒன்று தானாகவே அந்த விளம்பரத்தை கொடுத்திருப்பது தெரிய வந்தது. அந்த நிறுவனத்தின் மீது புகார் கொடுக்க மம்தா பானர்ஜி உத்தரவிட்டதின் பேரில், டெல்லி பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.