அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி சாவு: டாக்டர்கள், நர்ஸ்கள் மீது வழக்கு
புளியங்குடி: புளியங்குடி அரசு மருத்துவமனையில் பிரவசத்திற்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் வயிற்றில் குழந்தையுடன் இறந்தார். இதையடுத்து டாக்டர்கள், மற்றும் செவிலியர்கள் மீது புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி கீழபள்ளிவாசல் புதுமனை 3வது தெருவை சேர்ந்தவர் சுபகானி. ஹோட்டல் தொழிலாளியான இவரது மனைவி ஷமீலா பீவி. இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ரியாஸ்கான் என்ற 3 வயது மகன் இருக்கிறான்.
இந்நிலையில் 2வது முறையாக கர்ப்பமடைந்த ஷமீலாபீவிக்கு நேற்று காலை 6 மணிக்கு பிரவச வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பணி நேர டாக்டர் இல்லாததால் அடுத்து பணிக்கு வரவேண்டிய டாக்டருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வர தாமதமானதால் ஷமிலாபீவிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை.
இதனால் அவர் வயிற்றில் இருந்த குழந்தையுடன் இறந்தார். இதனையறிந்த ஷமீலா பீவியின் உறவினர்கள் திரண்டு வந்து பணி நேரத்தில் இல்லாத மருத்துவர், சரிவர செயல்படாத செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஷமீலாபீவி குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் உறுதி அளிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புளியங்குடி இன்ஸ்பெக்டர் பொறுப்பு தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, ஏட்டு கோமதி நாயகம், வருவாய் ஆய்வாளர் கனகசபாபதி, வி.ஏ.ஓ. அங்கப்பன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன்திருமலைகுமார், தென்காசி ஆர்.டி.ஓ. மூர்த்தி, சுகாதார துணை இயக்குனர் உஷா ரிசிபதாஸ், சிவகிரி தாசில்தார் ராஜாராம் ஆகியோர் ஷமீலா பீவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து ஆர்.டி.ஓ. கலெக்டரிடம் செல்போனில் பேசினார். ஷமீலா பீவியை மருத்துவமனையில் சேர்த்தபோது பணியில் இல்லாத மருத்துவர், சரிவர செயல்படாத செவிலியர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மேலும், தென்காசி அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ குழு மூலம் ஷமீலா பீவியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
புளியங்குடி போலீசில் ஷமீலா பீவியின் கணவர் சுபகானி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.