இந்தியா வந்து சேர்ந்தது காமன்வெல்த் போட்டி ஜோதி
அமிர்தசரஸ்: க்வீன்ஸ் பேட்டன் என அழைக்கப்படும் காமன்வெல்த் போட்டிக்கான ஜோதி உலக நாடுகளில் வலம் வந்த பின்னர் இறுதியாக, பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.
அடுத்த நூறு நாட்களுக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்டு உறுதியில் காமன்வெல்த் போட்டி நடைபெறும் டெல்லியை வந்தடையும்.
வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்த காமன்வெல்த் ஜோதியை காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் கமிட்டித் தலைவரான சுரேஷ் கல்மாடி பெற்றுக் கொண்டார். அவரிடம் பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத் தலைவர் சையத் ஆரிப் ஹசன் ஒப்படைத்தார். எல்லையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது காமன்வெல்த் போட்டி சம்மேளனத் தலைவர் மைக் பென்னலும் உடன் இருந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி ஜோதி ஓட்டத்தை இங்கிலாந்து ராணி எலிசெபத், பக்கிங்காம் அரண்மனையில் தொடங்கி வைத்தார். அப்போது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உடன் இருந்தார்.
71 நாடுகளில் 1,90,000 கிலோமீட்டர் பயணித்து காமன்வெல்த் ஜோதி இந்தியாவை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க்வீன்ஸ் பேட்டன்...
க்வீன்ஸ் பேட்டன் என்பது 71 சிறிய விளக்குளைக் கொண்டுள்ள ஜோதியாகும். காமன்வெல்த் அமைப்பில் 71 உறுப்பினர்கள் இருப்பதை சித்தரிக்கும் வகையில் இந்த 71 விளக்குகளும் ஜோதியின் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு வீடியோ கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். ஜோதி பயணிக்கும் வழியெல்லாம் இது படமாக எடுத்துக் கொண்டே வரும். மேலும், ஜோதி எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை அறிவதற்காக பேட்டனில், ஜிபிஎஸ் சாதனமும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம ஜோதியின் பயணத்தை காமன்வெல்த் போட்டி இணையதளத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.
அலுமினியம், 18 கேரட் தங்கம் ஆகியவற்றால் ஆன பேட்டன் இது.