யுஎஸ் தடை பட்டியலில் இஸ்ரோ, டிஆர்டிஓ-நீக்க இந்தியா வலியுறுத்தல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் தடை பட்டியலிலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அமைப்பான டி.ஆர்.டி.ஓ. ஆகியவற்றின் பெயர்களை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
1998ம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதையடுத்து இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அமைப்புகளுக்கு அமெரிக்க தடை விதித்தது.
இதனால் இவற்றுக்கு அமெரிக்கா வழங்கி வந்த தொழில்நுட்ப உதவிகள் நிறுத்தப்பட்டன.
இந் நிலையில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான உயர் நிலை குழு, தடை பட்டியலிலிருந்து இந்திய அமைப்புகளின் பெயர்களை நீக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய ஆனந்த் சர்மா, தடை பட்டியலில் இருந்து இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ. அமைப்புகளின் பெயர்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்புத்துறையில் முதலீடு செய்யவும் அமெரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கோரியுள்ளோம்.
பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீடுகளை வரவேற்பதில் இந்தியா திறந்த மனதுடன் உள்ளது. இந் நிலையில் தடை பட்டியலில் இந்த நிறுவனங்களின் பெயர்கள் இருப்பது அர்த்தமுள்ளதாக இருக்காது.
போபால் விஷ வாயு-அமெரிக்காவுடன் பேசவில்லை:
போபால் விஷவாயு சம்பவம், யூனியன் கார்பைட் தலைவர் ஆண்டர்சன் விவகாரம் ஆகியவை குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் பேசவில்லை.
போபால் விஷ வாயு சம்பவம் குறித்து நாம் அமைத்துள்ள அமைச்சர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகள் இந்தியாவைத்தான் கட்டுப்படுத்தும், அமெரிக்காவை அல்ல என்றார்.
இந் நிலையில் போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1,300 கோடி நிவாரணம் அளிப்பது உள்ளிட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சமும், நிரந்தரமாக ஊனமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், புற்றுநோய், நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்க ப.சிதம்பரம் தலைமையிலான குழு செய்த பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.
அதே போல யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் மத்திய அமைச்சரை ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.