தென் மேற்குப் பருவ மழையில் பற்றாக்குறை-விரைவில் வலுக்கும் என அதிகாரிகள் தகவல்
இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை சற்றுதாமதமாகவே தொடங்கியது. அதேசமயம், போதிய மழையும் இதுவரை பெய்யவில்லை. இடையில் இரு புயல்கள் குறுக்கிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன.
இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் 1ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையிலான கால கட்டத்தில், 109.6 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 97.4 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.
இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என்றுகூறியுள்ள வானிலை மைய அதிகாரிகள், வரும் நாட்களில் மழை நன்றாக பெய்யும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்து வரும் 3 நாட்களில் பீகார், சத்தீஸ்கர் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்தில் தென்மேற்கு பருவ மழை கணிசமாக பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் சூழ்நிலைகள் வலுத்துள்ளதால் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.