பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஆதரவை வாபஸ் பெற வேண்டும்-ஜெ.
சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். இதை மத்திய அரசு செய்யத் தவறும்போது, ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அல்லது உயர்த்தப்பட்ட விலையின் கூடுதல் சுமையை திமுக அரசு ஏற்க முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
பெட்ரோல், டீசல், காஸ், கெரசின் விலை உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெயலலிதா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு தற்போது பெட்ரோலின் விலையை 3 ரூபாய் 50 பைசா அளவிற்கும், டீசலின் விலையை 2 ரூபாய் அளவிற்கும், எரிவாயுவின் விலையை 35 ரூபாய் அளவிற்கும், மண்ணெண்ணெயின் விலையை 3 ரூபாய் அளவிற்கும் உயர்த்தி ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல் இத்துடன் நின்றுவிடவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, பெட்ரோல் உயர்வு மீதான கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டது.
அதாவது, இனிமேல் சர்வதேச சந்தைகளின் விலைக்கு ஏற்ப, லாபத்தை குறிக்கோளாகக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலின் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்றும்; டீசல் விலையைப் பொறுத்தவரை, இது பற்றிய முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
விலைவாசியைக் கட்டுப்படுத்த மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்திவிட்டு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மூலம் விலைவாசியை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
இதைவிட ஒரு கொடுமை எதுவும் இருக்க முடியாது. வாக்களித்த மக்களை வாட்டி வதைக்கிறது மத்திய அரசு.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று தற்போது கோரிக்கை விடுத்திருக்கிறது.
எனவே, மத்திய அரசால் எவ்வளவு விலை ஏற்றப்பட்டதோ, அந்த அளவுக்கு மாநில விற்பனை வரியை குறைக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த விலை உயர்வு அறிவிப்பினையடுத்து, ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் பெருமளவு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மாணவ-மாணவியர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை எளிய பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடுதல் வாகனக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் பன்மடங்கு உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பொதுவாக பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் போது, ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெயின் விலை உயர்த்தப்பட மாட்டாது. இந்த முறை அதையும் விட்டு வைக்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசுக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருக்குமானால், ஏழை எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வையும், பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டினை நீக்கியதையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு;
இதை மத்திய அரசு செய்யத் தவறும் பட்சத்தில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை திமுக அரசின் முதல்வர் கருணாநிதி விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இல்லையெனில், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கூடுதல் சுமையை அரசு ஏற்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications