பஸ்-கார் மோதல்: டி.வி பெண் செய்தி வாசிப்பாளர் பலி
மதுரை: மதுரை அருகே நான்கு வழிச் சாலை சந்திப்பில் பஸ்சும் காரும் மோதிக் கொண்டதில் டி.வி. பெண் செய்தி வாசிப்பாளர் பலியானார். அவரது கணவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த அப்துல் வகாப் (45) விமான நிலைய பொறியாளராக உள்ளார். இவரது மனைவி கற்பகம் (40) தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள்.
தென்காசியில் நாளை நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ஒரு காரில் சென்றனர்.
மதுரைக்கு கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி விலக்கு என்ற இடத்தில் நான்கு வழிச்சாலை சந்திப்பில் கார் சென்றபோது மதுரையில் இருந்து சென்ற பஸ்சுடன் மோதியது.
இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். விபத்து குறித்து தகவல் அறிந்து போலீசாரும், 108 ஆம்புலன்சும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கார் பாகங்களை உடைத்து காயமடைந்து மயங்கி கிடந்த அப்துல் வகாப், அவரது மகள் நிஷா (17), மகன் ஆசிக் (11), கற்பகத்தின் சித்தி ரோஜா (34), உறவினர் கெளரி (15), முகம்மது மைதீன் (18), அஜ்மீர் அலி, கார் டிரைவர் அசன் மைதீன் ஆகியோர் மீட்கப்பட்டு மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கற்பகம் தலையில் பலத்த அடிபட்டு இறந்து போன நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை-சாலை விபத்தில் திமுக முன்னாள் செயலர் பலி:
இந் நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் என்.எஸ். ராஜன் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க காரில் வந்தார்.
கோவையையடுத்த ஈச்சனாரி அருகே லாரியும், காரும் மோதிக் கொண்டதில் ராஜன், அவருடன் பயணம் செய்த நண்பர், டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.












Click it and Unblock the Notifications