விஷமத்தனமாக சயீத் பேசுவதை தடை செய்ய முடியாது-பாக்.
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக ஜமாத் உத் தவா (லஷ்கர் இ தொய்பாவின் மறுபெயர்) தலைவரான ஹபீஸ் சயீத் பேசி வருவதை தடுக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின் மூளை இந்த சயீத். ஆனால் இவன் மீது பாகிஸ்தான் அரசு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவிடமும் இவனை ஒப்படைக்க முடியாது என்று கூறி வருகிறது. இதன் காரணமாக சயீத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தைரியமாகவும், பகிரங்கமாவும் எச்சரிக்கை விடுத்து துவேஷமாக பேசி வருகிறான்.
இதுகுறித்து இந்தியா பாகிஸ்தானிடம் தனது கவலையையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மகமூ்த் குரேஷி கூறுகையில், ஒரு ஜனநாயக நாட்டில், பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அது உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு விதமாக பேசத்தான் செய்வார்கள். அதையெல்லாம் தடுக்க முடியாது.
தீவிரவாதப் போக்குடன் செயல்படுபவர்கள், பேசுபவர்கள் இரு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம், இதுபோன்ற கருத்துக்களுக்கு இரு நாடுகளையும் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் ஆதரவாக இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.
இரு நாடுகளையும் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இதுபோன்ற தீவிரவாத கருத்துக்களை ஆதரிப்பதில்லை. அது நமக்கு ஆறுதலான விஷயம். அமைதி நிலவ வேண்டும், வளர்ச்சி அடையா வேண்டும், இயல்பு நிலை நிலவ வேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்றார் அவர்.