முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை
சோழிங்கநல்லூர்: முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த வில்லியம்ஸ் கேரி (19), சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிக்கச் சேர்ந்தார்.
டிப்ளமோ முடித்த இவர் நேற்று முன்தினம்தான் நேரடியாக இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர்ந்ததார்.
நேற்று வகுப்புக்கு சென்று விட்டு மாலை கல்லூரி விடுதிக்கு திரும்பினார். 6 மணியளவில் குளியலறைக்குச் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால், சக மாணவர்கள் கதவை தட்டிப் பார்த்தனர்.
ஆனால் கதவை கேரி திறக்காததால், அதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கேரி, முகத்தில் பிளாஸ்டிக் பையை மாட்டி ஷூ லேஸால் கழுத்தை சுற்றி கட்டிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.