ரூ. 165 கோடியில் 7 நகராட்சிகளில் குடிநீர் திட்டங்கள்: ஸ்டாலின் ஒப்புதல்
சென்னை: தமிழகத்தில் உள்ள 7 நகராட்சிகளில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இன்று தலைமைச் செயலகத்தில் ஜெர்மானிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி திட்டத்தின் அதிகாரம் அளிக்கும் குழுவின் 2-வது கூட்டம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை, பள்ளிப்பாளையம், உதகமண்டலம், கரூர், இனாம் கரூர், கடையநல்லூர் மற்றும் தாந்தோணி ஆகிய நகராட்சிகளில் ரூ.165 கோடியே 32 லட்சம் செலவில் 7 புதிய குடிநீர் திட்டப்பணிகளைச் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி இக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அதில் 7 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ. 497 கோடியே 26 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டு நடந்து வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் (பொ) ஆர். ராஜ கோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ககன்தீப் சிங்பேடி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே. பணீந்தரரெட்டி, நிதித்துறை கூடுதல் செயலர் ஆர். கிர்லோஸ் குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப. செந்தில்குமார், பேரூராட்சிகள் இயக்குநர் த. ராசேந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications