பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க 6 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள்-அமைச்சர் பன்னீர்செல்வம்
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டனம், நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அது பரவியுள்ளது. நாகூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,
கேரள மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்ற செய்தி கிடைத்ததும் தமிழக அரசு உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. சென்னை கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையிலும் தொடர்ந்து மாலையிலும் என் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்.
கேரளா எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களில், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 பேருக்கும், சென்னையில் 3 பேருக்கும், திருவள்ளூரில் 2 பேருக்கும், நாகை, நாமக்கல் மாவட்டங்களில் தலா ஒருவரும் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் தேவையான அளவுக்கு டாமி புளு மாத்திரையும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருந்தால், உடனுக்குடன் சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் ரத்தம், சளி போன்றவற்றை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக காய்ச்சல், இருமல், தொண்டை சளி, உடம்பு வலி, தொடர்ச்சியாக கண்களில் எரிச்சல் இருப்பவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆஸ்பத்திரிக்குச் சென்று மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து உள்ளது. யாரும் பீதியைக் கிளப்பவேண்டாம். நோயின் தன்மை கடந்த ஆண்டைக்காட்டிலும் வீரியம் குறைந்து உள்ளது.
இருந்தபோதிலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குடிக்கவேண்டும். நோயின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சோதனை மேற்கொண்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் பன்றிக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கலாம். மக்கள் பீதி அடைய வேண்டாம். நோய் பரவி விடுமோ என்று மற்றவர்களை குழப்பவும் வேண்டாம் என்றார்.
குமரியில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு வாலிபருக்கு பன்றிக் காய்ச்சல் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 15 பேர் பன்றிக் காய்ச்சல் சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குருந்தன்கோட்டையை சேர்ந்த சதீஷ் என்பவர் பன்றி காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடு்த்து அவருக்கு தீவிர சிகிச்சை அளி்க்கப்படுகிறது.