திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில், 27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி தலைமறைவாகி விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி உதயா (25). காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒன்றரை வயதில் யுவராணி என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கர்ப்பிணி பெண் உதயா, தன் கைக்குழந்தையுடன் திருப்பூர் வந்தார். திருப்பூரில் உள்ள கிராமப்புற மக்கள் மேம்பாட்டு மையத்தின் நிர்வாகி பிரபாவதி (27), அவரை வீரபாண்டியில் தான் நடத்தி வந்த காப்பகத்துக்கு அழைத்து சென்றார்.
அந்த காப்பகத்தில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டதால், யுவராணியை வேறு ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து விடுவதாக கூறி உதயாவின் குழந்தையை பிரபாவதி வாங்கி சென்றார். இந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு உதயா தன் கணவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.
அதைத் தொடர்ந்து, தன் குழந்தை யுவராணியை தன்னிடம் ஒப்படைக்கும்படி பிரபாவதியிடம் உதயா கேட்டார். ஆனால் அவர் குழந்தையை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து உதயா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் அடிக்கடி காப்பகத்திற்கும், மக்கள் மேம்பாட்டுமையத்திற்கும் வந்து போனது தெரிய வந்தது. பிரபாவதியுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ராஜாவவைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.மேலும், சம்பந்தப்பட்ட காப்பகத்தில் மொத்தம் 40 குழந்தைகள் இருந்ததும் தெரிய வந்தது. அய்யம்பாளையம் காப்பகத்தில் போலீஸார் நடத்திய சோதனையின்போது 13 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். 27 குழந்தைகள் அங்கு இல்லை.
இதையடுத்து அவர்களையும், பிரபாவதியையும் போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் கடத்தப்பட்டுள்ளனரா அல்லது வேறு எங்காவது போயுள்ளனரா என்பது குறித்து விசாரணைநடந்து வருகிறது.