85 வயது தாயின் கழுத்தை மகனே அறுத்து கொலை செய்த கொடூரம்
மயிலாடுதுறை: 85 வயதான தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தலையை பையில் வைத்து எடுத்து வந்த மகன், போலீசில் சரண் அடைந்தார்.
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் சித்தர்காடு பாரதிநகர் புதுத்தெருவில் வசிப்பவர் பனை ஏறும் தொழிலாளியான அருளானந்தம் (44). இவரது தாய் செபஸ்தியம்மாள் (85). கடந்த சில மாதங்களாக அருளானந்தம் பணக் கஷ்டத்தில் இருந்து வந்தார். இதனால் தன் தாய் செபஸ்தியம்மாளை அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை.
இதனால் அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த செபஸ்தியம்மாளை ஈவு இரக்கமின்றி கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் அந்த மூதாட்டியின் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அருளானந்தம் துண்டிக்கப்பட்ட தன் தாயின் தலையை ஒரு பையில் எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார். இதை பார்த்து பயந்த அக்கம்பக்கத்தினர் அலறினார்கள். இதையடுத்து அவர் தலையை வீட்டுக்குள் எறிந்து விட்டு கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருளானந்தத்தை கைது செய்தனர். செபஸ்தியம்மாள் பிரேதத்தை பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications