நெல்லை மருத்துவ கல்லூரியில் பன்றிக் காய்ச்சல் சோதனை மையம்
நாகர்கோவில்: தமிழகத்தில் 30 ஆயிரம் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இவற்றை டாக்டர்கள், மற்றும் நர்சுகளுக்கு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்படுவதை முன்னிட்டு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் நேற்று நாகர்கோவில் வந்தார். பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாகர்கோவிலில் 5 இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நல உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்களின் சளி, ரத்த மாதிரிகள் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனைக்கான உபகரணங்கள் வாங்கப்படும்.
நெல்லை மருத்துவ கல்லூரியில் இன்னும் ஒரு வாரத்தில் பன்றிக் காய்ச்சல் சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்றவை பயப்படும் அளவில் இல்லை. எப்போதும் உள்ள சாதாரண காய்ச்சல்தான்.
குமரி மாவட்டம் உட்பட கடற்கரை கிராமங்களில் பூச்சி மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்களுக்கு தமிழகம் முழுவதும் இதுவரை 20 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட உள்ளது. பன்றிக் காய்ச்சல் தென்பட்டவர்களுக்கு சிகி்ச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் அது தொற்றிக் கொள்வதால் முதற்கட்டமாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகளுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் இறப்பு எதுவும் நிகழவில்லை. பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியின் விலை ரூ. 350. தனியாரிடம் இந்த தடுப்பு மருந்து கிடைப்பதில்லை என்றார்.