கருணாநிதி, ஸ்டாலின், டிஜிபிக்கு மிரட்டல்: நெல்லையில் இருவர் கைது
நெல்லை: முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய 2 பேரை நெல்லை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை வெடிகுண்டு வைத்து கொலை செய்யப் போவதாக மிரட்டல் கடிதம் வந்தது.
நெல்லையைச் சேர்ந்த நாகூர் மீரான் என்பவரின் பெயரில் வந்த இந்த கடிதம் குறித்து நெல்லை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் நாகூர் மீரான் நெல்லையில் கல் குவாரி நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது உறவினரான இக்பால் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நாகூர் மீரானிடம் பணம் கேட்டுள்ளார். மீரான் தர மறுக்கவே, அவரை சிக்கலில் மாட்ட திட்டமிட்டார் இக்பால்.
அவரும் உறவினரான அகமது ரகமதுல்லாவுடன் இணைந்து நாகூர் மீரான் தனது கல்குவாரியில் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்து வருவதாகவும், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் வெடிகுண்டு அனுப்பி வருவதாகவும் கடிதம் எழுதி போலீசுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் இவர்களே முதல்வர், துணை முதல்வருக்கு மிரட்டல் விடுத்து மீரானின் பெயரில் கடிதம் அனுப்பியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இக்பால் மற்றும் அகமது ரகமதுல்லா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications