திமுக மா.செ சொத்துக்களும் புதிய பஸ் நிலையமும்-ஜெ

கொடநாட்டிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகள் பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், தூத்துக்குடிக்கு வடக்கே செல்லும் பேருந்துகள் எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் கடந்த 17 ஆண்டு காலமாக இயங்கி வந்தன.
தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் அவரது உறவினர்களுக்கு புதிய பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகம், நட்சத்திர அந்தஸ்து உள்ள உணவகம், வீடுகள், நிலபுலங்கள் இருக்கின்றன.
அனைத்துப் பேருந்துகளும் 1993ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கினால், தன் சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணத்தில், பழைய பேருந்து நிலையத்தை அப்போதே மூட நினைத்தவர் திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி. அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றமும், தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், தூத்துக்குடிக்கு வடக்கே செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயங்க உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 17 ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சனையும் இன்றி பேருந்துகள் இயங்கி வந்தன.
இந் நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி, போக்குவரத்துக் குழுவின் முடிவிற்கிணங்க அனைத்துப் பேருந்துகளும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செயல்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியிருக்கிறார்.
ஆனால், போக்குவரத்துக் குழுவே செயல்படவில்லை என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் தொடர் மின் வெட்டு காரணமாக அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தான் மாநகராட்சியால் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது; புறநகர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு விற்கக்கூடிய அவல நிலை நிலவுகிறது.
பாதாள சாக்கடைத் திட்டம் என்ற பெயரில், அனைத்துச் சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன; கடந்த சில மாதங்களில் மட்டும் 10 ஆயிரம் ரேஷன் கார்டுகள் முறையின்றி நீக்கம் செய்யப்பட்டு, நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளை சரி பார்க்க போதிய அலுவலர்கள் இல்லாத காரணத்தினால் நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு 10 ஆயிரம் குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
பாதாள சாக்கடை திடக் கழிவுகளுக்கான சேமிப்புக் கிடங்கை நகரின் மையப் பகுதியிலிருந்து மாற்ற எந்தவித நடவடிக்கையையும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட தூத்துக்குடி முத்தையாபுரம் பஞ்சாயத்து ஆரம்ப சுகாதார நிலையம் தற்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயக்க வலியுறுத்தியும், மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி, குடும்ப அட்டை ஆகிய வற்றில் கவனம் செலுத்த வலியுறுத்தியும், அதிமுக தூத்துக்குடி மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஜெனிபர்சந்திரன் தலைமையிலும், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் பள்ளத்தூர் டி.முருகேசன் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழகச் செயலாளர் வி.பி.ஆர். ரமேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications