கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி?
கடையநல்லூர்: கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியாகியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் நகராட்சியில் கடந்த ஆண்டு டெங்கு, டைபாய்டு, சிக்குன் குனியா காய்ச்சலின் அறிகுறியோடு பரவிய மர்ம காய்ச்சலில் 5 குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உள்பட பல்வேறு தொற்று நோய் கட்டுபாடு அமைப்புகளை சேர்ந்த உயர்நிலை மருத்துவர்கள் மற்றும் பூனே, பெங்களூர், டெல்லி உள்பட பல பகுதிகளில் இருந்து வந்த விஞ்ஞானிகள் கடையநல்லூரில் ஆய்வு நடத்தினர். தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையால் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் பலியானார். மேலக்கடையநல்லூரை சேர்ந்த அலங்காரத்தின் இரண்டரை வயது மகள் நாககோபிகாவுக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் நாககோபிகா இறந்தாள்.
ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததாலேயே நாககோபிகா இறந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கடையநல்லூரில் காய்ச்சலில் இறந்தவர்களுக்கும் இதே போல் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவுகிறதோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சுகாதார சீர்கேடு, மாசுபட்ட குடிநீர் வினியோகமே மர்ம காய்ச்சல் பரவ காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications