வகுப்புக்குள் வர தடை விதிக்கப்பட்டதால் பி.இ மாணவன் தற்கொலை
அரக்கோணம்: வகுப்புகளுக்கு வர பேராசிரியர் அனுமதி மறுத்து வெளியே நிற்க வைத்ததால் வேதனை அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அரக்கோணத்தை சேர்ந்த ரகுநாத்செட்டியார் மகன் சந்திரசேகர் (22). பெற்றோர் இல்லை. இதனால் தனது மூத்த சகோதரி டாக்டர் திவ்யா மணிகண்டன் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார். சந்திரசேகர் சரிவர கல்லூரிக்குப் போவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரி நிர்வாகம் டாக்டர் நித்யாவை அழைத்து கண்டித்துள்ளது. இதையடுத்து இனிமேல் சரியாக வருவான் என்று கூறி டாக்டர் நித்யா கல்லூரி நிர்வாகத்திடம் உறுதியளித்து மீண்டும் சேர்த்துள்ளார்.
இதையடுத்து சந்திரசேகர் கல்லூரிக்குச் சென்றார். ஆனால் பேராசிரியர் அவரை உள்ளே அனுமதிக்காமல் வெளியிலேயே நிறுத்தியுள்ளார். அடுத்த நாளும் அதேபோலவே செய்யவே மனம் உடைந்தார் சந்திரசேகர்.
இதையடுத்து வீடு திரும்பிய அவர்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு தனது சகோதரிக்கு ஒருகடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில், நான் இந்த உலகத்தில் இனி வாழ விரும்பவில்லை. இதுவரை உனக்கு கொடுத்து வந்த கஷ்டத்துக்கு மன்னிக்கவும், கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க 2 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என்னை போல பலர் இது போல இறந்து போவார்கள் என்று கூறியிருந்தார்.
கல்லூரி நிர்வாகம் மீது சந்திரசேகரின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.