நிபுணர் குழுவை அமைத்தது சரியே-இலங்கைக்கு பான் கி மூன் பதிலடி
அங்கோலா: எனக்கு உள்ள அதிகாரத்திற்குட்பட்டுத்தான் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான குழு அமைத்தேன் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.
காங்கோ நாட்டின் பொன் விழா சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்த மூன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
என்னுடைய திட்டத்துக்கு எதிர்மறையான செயல்பாடுகளை இலங்கை அரசு தெரிவிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க குழு அமைத்தால் இலங்கை ஆத்திரப்படுவது ஏன்?
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறிய அனைத்து குற்றவாளிகளையும் கண்டறிவதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் என்ற வகையி்ல் எனக்குள்ள அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் மூன்.
மட்டக்களப்பு வன பகுதிகளில் புலிகள்?:
இதற்கிடையே இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலை அருகேயுள்ள காட்டுப் பகுதிகளில் சில நாட்களுக்கு முன் இலங்கை விமானப்படை விமானங்கள் திடீரென குண்டு வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குண்டுவீச்சால் அந்த காட்டுப் பகுதி அருகே வயல்வெளிப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குண்டு வீசப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஆனால், அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குடும்பிமலை காட்டுப் பகுதியை நோக்கி ராணுவப் படைகள் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.