சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: கருணாநிதியுடன் பிரணாப் முகர்ஜி ஆலோசனை
சென்னை: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சநதித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறி்த்து விவாதித்தார்.
கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால், அந்த அடிப்படையில் சென்சஸை நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரி வருகிறார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவும் உள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் சில முக்கியத் தலைவர்கள் இதை எதிர்க்கின்றனர். அதே போல மணடல் கமிஷனை அமலாக்கிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை வட நாட்டு மீடியாக்கள் வில்லனைப் போல சித்தரி்த்து அவரை அரசியல்ரீதியில் ஒடுக்கியதை காங்கிரஸ் மறக்கவில்லை.
அதே கதி நமக்கும் ஏற்படலாம் என்று கூறி காங்கிரஸ் தலைமையை இந்தத் தலைவர்கள் குழப்பி வருவதாகத் தெரிகிறது.
இந் நிலையில் சாதிவாரி சென்ஸஸ் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அமைச்சரவைக் குழு கூடிக் கூடி கலைந்து வருகிறது.
இந்தக் குழு முடிவெடுத்து அதை அமலாக்குவதற்குள் இப்போது நடந்து வரும் சென்ஸஸ் பணிகள் நடந்து முடிந்துவிடும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் காங்கிரசிடம் சுட்டிக் காட்டி வருகின்றன.
மேலும் இந்தப் பிரச்சனையை முன் வைத்து லாலு, ராம்விலாஸ் பாஸ்வான், முலாயம் சிங் யாதவ், தமிழகத்தில் பாமக ஆகியவை பிரச்சனை கிளப்பி வருகின்றன.
இந் நிலையில் தான் இன்று பிரணாப் முகர்ஜி முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.
அப்போது பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுடன் விளையாடினால் தமிழகத்தில் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்பதை காங்கிரசுக்கு திமுக தலைமை சுட்டிக் காட்டியதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சரவை குழுக் கூட்டத்தில் வெவ்வேறு விதமாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
எனவே, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துகளை இந்த விஷயத்தில் அறிய வேண்டியிருக்கிறது. அந்த வகையில் முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினேன். மேலும் நேரடி வரி விதிப்பு நெறிமுறைகள் தொடர்பாகவும் பேசினேன் என்றார்.
மூப்பனார் சிலை திறப்பு:
பின்னர் கும்பகோணம் புறப்பட்டுச் சென்ற பிரணாப் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் நிறுவப்பட்ட ஜி.கே.மூப்பனார் சிலையை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் நாராயணசாமி, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications