என்எல்சி ஸ்டிரைக் நீடிக்கிறது-3வது கட்ட பேச்சு தோல்வி-இன்றும் பேச்சு தொடர்கிறது
சென்னை: என்எல்சி தொழிலாளர்களின் ஸ்டிரைக் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்று நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
என்எல்சி நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கையிருப்பு குறைந்து வருவதால் மின்உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
தொமுச தொழிற்சங்கத்தினருக்கும், பாட்டாளி தொழிற்சங்கத்தினருக்கும், நிர்வாகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 3வது கட்டமாக சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் (மையம்) ஜெகன்னாதராவ் முன்னிலையில் நடந்தது.
இதில் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் தலைமை பொது மேலாளர் லூதர்ஸ், பொது மேலாளர் பெஞ்சமின் ராயப்பா, தொ.மு.ச. தலைவர் செ.குப்புசாமி, வீர ராமச்சந்திரன், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் ஞானசேகரன், பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு 7.15 மணி வர நீடித்தது. இருப்பினும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இது தோல்வியில் முடிந்ததாக குப்புசாமி உள்ளிட்டோர் கூறினர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பேச்சுவார்த்தை இன்னும் தொடருகிறது. மீண்டும் இன்று மதியம் 3 மணிக்கு சென்னையில் உள்ள நெய்வேலி ஹவுசில் இந்த பேச்சுவார்த்தை தொடருகிறது. நாங்கள் வைத்த கோரிக்கையை பரிசீலிக்க அவர்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். நாளை (இன்று) நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றனர்.
பேச்சுவார்த்தை வெற்றி பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்று காலை நிலவரப்படி தொழிலாளர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
திருமாவளவன் கோரிக்கை:
இந் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் இழுபறி நிலையிலேயே தொடர்வதனால் இப்போராட்டம் மென்மேலும் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை எல்லாம் சுட்டிக்காட்டி விரைவாக இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் எனத் தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்தி உள்ளது.
தமிழக அரசின் வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.
தொழிலாளர்களின் நியாயமான, ஜனநாயகப் பூர்வமான, சட்டப்பூர்வமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications