முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு-நாளை தவ்ஹீத் ஜமாத் பேரணி
சென்னை: முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளை (ஜூலை 4) சென்னையில் பேரணி நடத்தப்படுகிறது.
இது குறித்து அதன் தலைவர் எம்.ஏ.பக்கீர் முகம்மத் அல்டாபி கூறுகையில்,
உரிய இட ஒதுக்கீடு இல்லாததால் சமுதாயத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். பல முஸ்லிம் இளைஞர்கள் உரிய கல்வித் தகுதி இருந்தும் தகுதியான பணிகளில் அமர முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.6 சதவீதம். ஆனால், சிறுபான்மையினர்களில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது.
முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்த பரிந்துரை இன்றளவும் சட்டமாக்கப்படவில்லை. இந்தக் கமிஷனின் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்.
இதை நாடாளுமன்றத்தில் உடனடியாக சட்டமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை தீவுத்திடலில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்படுகிறது என்றார்.